அத்தியாவசிய கடைகள் காலை 6-1 மணி வரை மட்டுமே செயல்படும்; கொரோனா தொடர்பாக மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும்...முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள்  காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200  நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

7 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய கடைகளும், மருந்தகங்களும் மட்டுமே இயங்குகின்றன. அவைகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே இயங்குகின்றன. தற்போது அதற்கான நேரக்கட்டுப்பாட்டில் மாற்றம் செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவை, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே ஆகும். ஏற்கனவே  பிற்பகல் 2.30 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் கடைகளை காலை 6 மணி முதல் திறந்து வைக்கலாம். மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய நேரக்கட்டுப்பாட்டை அனைத்து பொதுமக்களுக்கும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது.

கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வெறுப்புணர்வுடன் பார்க்க வேண்டாம். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக கல்லூரிகள் மற்றும் சில இடங்களில் இடம் ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: