டெல்லி: கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என நிர்வாகக்குழுவுக்கு தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து போட்டியை ஒத்திவைப்பதாக பிபா அறிவித்துள்ளது. போட்டிக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.