காவல்துறை, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவல்துறையினர், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா என்ற கொடிய கிருமி தமிழகத்தில் பரவிவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் தங்களின் குடும்பங்களை விட்டு விட்டு இரவு, பகலாக சாலைகளில் காவல் காத்தும், கண்காணித்தும் வருகின்றனர். அதேபோல், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையினருக்கு உறுதுணையாக 108 அவசர ஊர்தி பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவ சிறிதும் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த இரு பிரிவினரின் பணியின் போதும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகம் ஆகும். ஆனாலும் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் துணிந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தியாகத்தால் தான் மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது.இவர்களின் தியாகமும், தன்னலமற்ற சேவையும் போற்றத்தக்கது ஆகும். அவற்றை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும், ₹50 லட்சத்திற்கான காப்பீடும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் காவலர் நிலையில் உள்ளவர்களுக்கு தற்காலிகமாக எரிபொருள் படி வழங்க அரசு முன்வர வேண்டும்.

Related Stories: