சென்னை: காவல்துறையினர், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா என்ற கொடிய கிருமி தமிழகத்தில் பரவிவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் தங்களின் குடும்பங்களை விட்டு விட்டு இரவு, பகலாக சாலைகளில் காவல் காத்தும், கண்காணித்தும் வருகின்றனர். அதேபோல், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையினருக்கு உறுதுணையாக 108 அவசர ஊர்தி பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவ சிறிதும் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.