30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக குறையும்: பிட்ச் நிறுவனம் கணிப்பு

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படும்

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறைந்துவிடும் என பிட்ச் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இயங்கவில்லை. ஏற்றுமதி ஸ்தம்பித்து விட்டது. இதனால், இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பொருளாதார வளர்ச்சி குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு இந்தியாவின் ஜிடிபி குறி்த்து கடந்த மாதம் 20ம் தேதி இந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டிருந்தது. இதில் நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் எனவும், அதற்கு முன்பு கடந்த டிசம்பரில் வெளியிட்ட கணிப்பில் 5.6 சதவீதம் எனவும் தெரிவித்திருந்தது.   கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம்தான் இதற்கு காரணம் என கூறியுள்ள பிட்ச் ரேட்டிங்ஸ், தற்போதைய ஜிடிபி மதிப்பீடு, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளது. கடந்த வாரம் மூடீஸ் வெளியிட்ட கணிப்பில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஏற்கெனவே கணித்த 5.3 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறையும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: