×

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்ற தந்தை: அவர் மீது நடவடிக்கை எடுங்கள்....! காவல்துறையிடம் மகன் புகார்

டெல்லி: டெல்லியில் தனது தந்தை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் செல்வதாக 30 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் பலர் சமூக விலகல் நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் விதமாக தேவையின்றி வெளியே வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் பலர் வீடுகளில் தங்கியிருக்காமல் வெளியிடங்களில் சுற்றித் திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் டெல்லியில் வசந்த்குஞ்ச் பகுதியில் தனது தந்தை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் செல்வதாக 30 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தான் வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதனால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Curfew, father, action, police
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...