களக்காடு: களக்காடு சுற்று வட்டார பகுதியில் பல விவசாயிகள் கேந்தி பூக்கள் பயிர் செய்திருந்தனர். இந்த செடிகள், 40 நாட்களில் இருந்து 50 நாட்களுக்குள் பூக்கும் தன்மை கொண்டவை. தற்போது செடிகளில் பூக்கள் மலரத் தொடங்கி உள்ளன. இவைகளை விவசாயிகள் பறித்து குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. இதன் காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதுபோல கூட்டம். கூடுவதை தவிர்க்க தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டும் மூடப்பட்டது. இதையடுத்து பூக்களை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் செடியிலேயே காய்ந்து நாசமாகி வருகின்றன.