ஊரடங்கு உத்தரவால் அறுவடை இல்லை செடியிலே அழுகுது ஸ்ட்ராபெரி: மூணாறு விவசாயிகள் கவலை

மூணாறு:  ஊரடங்கு உத்தரவால் மூணாறில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் ஸ்ட்ராபெரி, கேரட் முக்கிய விவசாயமாக உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஸ்ட்ராபெரி, கேரட் அறுவடை செய்து விற்பனை செய்து வந்தனர். தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கால் மூணாறில் அனைத்து சில்லறை கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அறுவடை செய்யப்பட்ட ஸ்ட்ராபெரி, கேரட்டை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் வருகை முடக்கத்தால், சில விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழங்களை பறிக்காமல் செடியிலே விட்டுள்ளனர். இதனால் அவை செடியிலே அழுகி வருகின்றன. இதேபோல் காரட் விற்பனையாகாமல் விவசாய தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி அருள்மணி கூறுகையில், ‘‘ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ட்ராபெரி, கேரட் அழுகி வருகின்றன. பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடரும்பட்சத்தில் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: