ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வருபவர் துறைமுக ஊழியர் வின்சென்ட். இவர் நேற்று இரவு உணவை முடித்து வின்சென்ட் தனது மனைவி ஜான்சியுடன் வீட்டின் அனைத்து அறைகளையும் மூடி விட்டு தூங்கியுள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை ஜான்சி எழுந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோவின் கதவு திறந்துகிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஜான்சி பீரோவை திறந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த ஜான்சி, இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். மேலும் கொள்ளையாளிகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் கொள்ளையர்கள் பீரோலை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்கள், சாவிகள் எதும் இருக்கிறதா என தேடி வருகின்றனர். எனவே மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆனால் நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை என கூறபடபடுகிறது.

Related Stories: