சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே கேட்ட ₹9 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக மருத்துவர்களுக்காக முழு கவசம், என்-95 மாஸ்க், வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க கூடுதலாக ₹3000 கோடியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி நேற்று காலை 11 மணிக்கு நாடு முழுவதும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 234 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கீழ்க்கண்ட உதவிகள் கூடுதலாக தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன்.