சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை மக்களை துன்புறுத்துவதாக உள்ளது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் 7.9 சதவீத வட்டி 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது மிகுந்த கண்டனத்திற்குரியது. அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதை விட தொழிலாளர் விரோத நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது. கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து வாங்கும் சக்தி இல்லாமல் இருக்கிற நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும்.