சென்னை: கோழி முட்டை, இறைச்சியை சாப்பிடலாம் என்றும், தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிக்கை:கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா தொற்று நோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கோழி, முட்டை இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி ஆகும். வதந்திகள் மூலம் நமது புரத தேவையினை இழப்பது ஒருபுறம் இருந்தாலும், கோழி வளர்ப்பு, தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போர்களும், விவசாயிகளும் மிகவும் நலிவடைந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு அவர்தம் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.