போக்குவரத்து, ஆலைகளை மூடியதால் அரிசி, எண்ணெய், பருப்பு விலை கடும் உயர்வு: ஆலைகளை இயக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரிசி, எண்ணெய் விலை உயர்வு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக போக்குவரத்துக்கும், அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆலைகள் இயக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சந்தையில் அவற்றின் வரத்துக் குறைந்து, அதன் காரணமாக விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. அனைத்து வகையான எண்ணெய்களின் விலைகள் 30 சதவீதம் வரை உயர்ந்திருக்கின்றன.   

 அரிசி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் அரிசி உற்பத்தி முழுமையாக தடைபட்டு விட்டது. அதுவும், ஆலைகளில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டுள்ள அரிசியையும் சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பதும் தான் விலை உயர்வுக்கும், தட்டுப்பாட்டுக்கும் காரணமாகும். எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் அதிகரித்ததற்கும் இவை தான் காரணங்கள் ஆகும்.  ஊரடங்கு ஆணை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை ஆலைகள் மூடப்பட்ட நிலையில்,  விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, தேயிலைக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில், தேயிலை ஆலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தியும் விவசாயம் சார்ந்த பணி தான் என்பதாலும், அவை தான் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளையும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அந்த ஆலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: