டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 202 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 330 பேரை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,35,587 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,56,917-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் இன்று காலை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,547 ஆக இருந்த நிலையில், தற்போது, மேலும் 90 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 132 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் அதிகமானோருக்கு இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாகவுள்ளவர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். டெல்லி மாநாட்டின் மூலம் அதிகமாக வைரஸ் பரவியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.