திருமங்கலம்: மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த 35 வயதானவர், கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பிய இவர், மதுரை, முல்லைநகரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். சளி, இருமல் மற்றும் சோர்வு காரணமாக இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சுகாதாரத்துறையினர் இவரிடம் விசாரணை நடத்தி சந்தேகத்தின்பேரில், அவரையும், தாயையும் 108 ஆம்புலன்சில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேலாக 108 ஆம்புலன்ஸ் வராததால், அந்த பகுதி மக்களே சரக்கு வாகனம் ஒன்றை தயார் செய்து இவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பலர் தங்களது வீடுகளில் இருந்து செல்போனில் வீடியோவாக எடுத்தனர். தொழிலாளியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கும் தாயாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.