அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகள் இஎம்ஐ வசூலிக்காது: தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் பேட்டி

சென்னை: “வங்கிகளில் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இஎம்ஐ தொகை வசூலிக்கப்படாது” என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவையை தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏ.டி.எம் சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பணத்தேவைகளை பூர்த்திச் செய்யலாம். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது போல் பொதுமக்கள் தங்கள் தவணைத் தொகையை தற்போது கட்ட தேவையில்லை. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள 3 மாத கால அவகாசத்திற்குப் பின் கட்டிக்கொள்ளலாம். இது குறித்து அந்தந்த வங்கி இணையதளம் மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். அனைத்து வங்கிகளுக்கும் தற்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் பொருந்தும். தள்ளி வைக்கப்படும் மாத தவணைகளுக்கான வட்டி மற்றும் இதர பிடித்தம் இருக்காது. மேலும் அரசு மக்களுக்கு அளித்து வரும் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை இதர அனைத்துச் சலுகைகளும் அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: