புதுடெல்லி: ‘‘மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனா வைரஸ் பரவும் பகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’ என மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு தினசரி பேட்டி அளித்து வருகிறார். அவர் நேற்று பேட்டியில் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 227 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்படாமல் தாமதமாவதும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாததும்தான் வைரஸ் பரவுவதற்கு காரணமாக உள்ளது. ஒரு நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், அவர் வசிக்கும் பகுதியை வைரஸ் பரவும் பகுதியாக அரசு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டு–்ள்ளதால், வைரஸ் பரவும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை கண்டறியவும் கடுமையான யுக்திகளை அரசு கையாண்டு வருகிறது. அதோடு, சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்க தேவையான மருத்துவ உபகரணங்களின் இருப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நோய் தொற்றை எதிர்த்து போராடுவதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். இதில் யாரும் பீதி அடைய வேண்டாம். இந்தியா இன்னும் 3ம் கட்டமான சமூக பரவல் கட்டத்திற்கு செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகளில் எந்த தட்டுப்பாடும் இல்லை என மருந்து உற்பத்தி துறை தெரிவித்துள்ளது. 1,500 பேருக்கு பாதிப்பு:நேற்று மாலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,548 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 50 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அசாம், ஜார்க்கண்ட்டில் முதல் நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 126 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 45 ஆக உள்ளது.