ஐ.நா பணியாளர் ஓய்வூதிய நிதிக்கான இந்திய அதிகாரி திடீர் ராஜினாமா

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு பணியாளர் ஓய்வூதிய நிதிக்கான பொதுச்செயலாளர் பிரதிநிதிகள் குழுவின் இந்திய அதிகாரி சுதீர் ராஜ்குமார் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு பணியாளர் ஓய்வூதிய நிதிக்கான பிரதிநிதிகள் குழுவின் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுதீர் ராஜ்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சுதீர் ராஜ்குமார் பொதுச்செயலாளரின் பிரதிநிதி பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்தார்.

இதனை ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிபடுத்தி உள்ளார். இருந்தும், ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படவில்லை.

ஐ.நா. நியமனத்திற்கு முன்னர், ராஜ்குமார் உலக வங்கி கருவூலத்தில் உலகளாவிய ஓய்வூதிய ஆலோசனை திட்டத்தின் தலைவராக இருந்தார். இதில் அவர் கொரியா குடியரசின் தேசிய ஓய்வூதிய நிதியம், தென்னாப்பிரிக்காவின் புருனே தாருஸ்ஸலாம் நிதி அமைச்சகத்திற்கு ஆலோசனை சேவைகளை வழங்கியுள்ளார்.

1988ம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்கா செயல்பாட்டில் உள்ள உலக வங்கி நிறுவனத்தில் இளம் நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலை, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலை அறிவியல் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: