சென்னை: தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து வகையான தொழில்களும், வணிகமும் முழுமையாக முடங்கி விட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் வருவாய் இல்லாமல் வாடி வருகின்றனர்.
இதை பொருட்படுத்தாத தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளன. குறித்த காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தவறும் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தனியார் பள்ளி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் செய்யக்கூடாது என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தினால், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளார். ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.