கொரோனா தடுப்பு நடவடிக்கை: இன்றுடன் ஓய்வுபெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாதம் பணி நீட்டிப்பு....முதல்வர் பழனிசாமி அறிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பணியாற்ற தற்காலிகமாக இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஓய்வுபெறும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பணி நீட்டித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 201 நாடுகளில் பரவி 34 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களால், இந்தியாவிலும்  கொரோனா பரவி 1,251 பேரை பாதித்துள்ளது.

இதுவரை 34 பேர் பலியாகியுள்ளர்.  தமிழத்தை பொருத்தவரை இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் எண்ணிக்கை 67-லிருந்து 74-ஆக  உயர்ந்துள்ளது. தற்போது வரை ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்று கலந்தாய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களின் நலன் கருதிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

31.03.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழிநுட்ப பணியாளர்கள் அனைவர்க்கும் ஓய்வுக்கு பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: