×

வெளிநாடு சென்று வந்தாரா? நடிகர் விஜய் வீட்டில் அதிகாரிகள் விசாரணை

சென்னை: நடிகர் விஜய் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று வந்தாரா என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அரசு கண்காணித்து வருகிறது. வெளிநாட்டுக்கு சென்று சமீபத்தில் திரும்பியவர்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள். அதேபோல் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் தனிமைப்படுத்தி கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நடிகை ராதிகா ஆப்தே, கவுதமி, ஸ்ருதி ஹாசன், இயக்குனர் மணிரத்னத்தின் மகன் உள்ளிட்டோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 இதற்கிடையே நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு சென்று வந்திருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அரசு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அப்போது விஜய் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக விஜய் எந்த நாட்டுக்கும் செல்லவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்கான ஆதாரமும் காட்டியுள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Tags : house ,Vijay , Overseas, actor Vijay, authorities are investigating
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்