சென்னை: கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். கடைகள், திருமண மண்டபம் மற்றும் சிறு, பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இவை இயங்கியபோது குப்பை தொட்டியில் போடப்படும் உணவுகளை நம்பியே தெருவோர நாய்கள் வாழ்ந்து வந்தன. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் உணவுக்கு திண்டாடி வருகின்றன. நாய், பூனை மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற வதந்திகள் பரவியதால் அச்சத்தில் சிலர் உணவு அளிப்பதை நிறுத்தி கொண்டனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. தற்போது அத்தனை நாய்களும் உணவின்றி அலைந்து வருகின்றனர். யாராவது உணவளிப்பார்களா என்பதுபோல், சாலைகளில் அங்குமிங்கும் திரிந்து வருகின்றன.
இந்தநிலையில், தான் பல்வேறு புகார்கள் மற்றும் நாய் பிரியர்களின் கோரிக்கைக்கு பிறகு ஆதரவற்றுள்ள சாலையோர நாய்கள், கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதன்படி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாய்கள் உணவின்றி சாலைகளில் தான் சுற்றி திரிகிறது. பசியில் திரியும் நாய்கள் என்ன செய்வதென்று அறியாமல், சாலைகளில் செல்பவர்கள் விரட்ட தொடங்குகிறது. மேலும் அங்குமிங்கும் உணவு தேடி அலைந்து கொண்டு இருக்கிறது. எனவே விலங்கு நல ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழக அரசு தன்னிச்சையாக தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.