கொரோனா தடுப்பு நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு 2 கோடி நிதி: தமிழக கவர்னர் வழங்கினார்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 கோடி நிதி வழங்கியுள்ளார். கொரோனா வைரசால் நாடு முழுவதும் முடங்கி கிடக்கும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் பலர் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி வழங்கியுள்ளார்.  இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெசரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் அரசுகளுக்கு உதவும் வகையில், தமிழக கவர்னர் பிரதமரின் நிவாரண நிதிக்கு1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 கோடியும் என 2 கோடி வழங்கியுள்ளார். இதேபோல் கூடுதலாக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தையும் வழங்கியுள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக மக்கள் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: