டெல்லி: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7,37,577 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,56,280 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வதேச அளவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 7, 37, 577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,56,280 பேர் குணமடைந்துள்ளனர்.
10 உயர்நிலைக் குழுக்கள் அமைப்பு
இந்த கொடிய வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஏற்படும் சூழ்நிலையைக் கையாளவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் சார்பில் 10 உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 24-ஆம் தேதியன்று, 21 நாள்களுக்கு தேசிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்ற பிறகு எழும் சூழ்நிலைகளைக் கையாள மத்திய அரசு இப்போதே தயாராகி வருகிறது.
அதன்படி பல்வேறு சூழ்நிலைகளை கையாளவும், பொதுமக்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு எளிதாக கொண்டு வரும் நோக்கிலும் 10 உயார்நிலைக் குழுக்களை பிரதமார் அலுவலகம் அமைத்துள்ளது. பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா இந்தக் குழுக்களுக்கு தலைவராக இருப்பார். இதில் பொருளாதாரம் தொடார்பான குழுவின் தலைவராக பொருளாதார விவகாரத் துறை செயலர் ஏ.சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.