சென்னை: கல்வியாளர் சிட்டிபாபு மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவரும், உயர்கல்வியில் சீர்திருத்தங்களை செய்தவருமான முனைவர் சை.வே.சிட்டிபாபு முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழக அரசின் இடைநிலைக் கல்வி இயக்குனராக பணியாற்றிய அவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில், தமிழகத்தில் முதன்முறையாக அஞ்சல்வழி கல்வி முறையை அறிமுகம் செய்தார்.
பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய போது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு புரட்சிகர திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். முனைவர் சிட்டிபாபுவை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் உயர்கல்வித்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.