வேலூர்: தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அரசு அறிவித்துள்ளதால் அதற்கான தேர்ச்சி பட்டியலை தயாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர். தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய அளவிலான 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. தேர்வுகளும் பிளஸ்2வுக்கு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிளஸ்1 மாணவர்களுக்கு ஒரு தேர்வும், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஒரு பாடத்துக்கு கூட தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பின்பற்றவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, அனைத்து வகை பள்ளிகளிலும் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வகுப்பு மாணவர்கள் இக்கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.