பிரதமர் நிவாரண நிதிக்கு முப்படை வீரர்கள் 500 கோடி நன்கொடை

புதுடெல்லி: பிரதமர் மோடி அறிவித்த, கொரோனா நிதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நன்கொடைகள் குவிந்து வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிகள்’ என்ற பெயரில் ஒரு நிதியை அறிவித்தார். பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார். பிரதமர் அறிவித்த முதல் நாளிலேயே இந்த நிதிக்கு ஏராளமானவர்கள் நன்கொடை அளித்தனர். டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி வரை நன்கொடை அளித்தது.

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி வழங்கியுள்ளார். இதேபோல், சிபிஐ பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை இந்த நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதேபோல், ரயில் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை (மொத்தம் ரூ.151 கோடி) இந்த நிதிக்கு அளித்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். மேலும், இந்த நிதிக்கு தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராணுவத்தின் முப்படை வீரர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளமான ரூ.500 ேகாடியை பிரதமரின் கொரோனா நிதிக்கு தந்துள்ளனர்.

Related Stories: