லண்டன்: பிரிட்டனில் இளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அந்நாட்டில் மேலும் 6 மாதம் ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை நடப்பதாக துணை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரிட்டனில் இரண்டாம் கட்டத்தை அடைவதைத் தடுக்க வருகிற செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டனின் துணை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இப்போது ஊரடங்கு அகற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சூழ்நிலைகளைப் பொறுத்து, ஊரடங்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு தொடரலாம். இருப்பினும், இவ்வளவு பெரிய ஊரடங்கு எந்த சூழ்நிலைகளுக்கு கொண்டு போகும் என்பது தெரியவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது அதிகமாக இருந்தாலும், மக்கள் வீட்டிலேயே இருந்தால் அவர்கள் பாதிக்கப்படுவது குறையும். பிரிட்டனில், கடந்த வாரம் 6,903 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்த வார தொடக்கத்தில் 2,710 பேர் பாதிக்கப்பட்டனர்.
தற்போதைய நிலைமையின்படி, லண்டனில் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற கூடாது. பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் மற்றும் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.