ஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு

புதுடெல்லி: நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது முகாம் அலுவலகத்தைவிட்டு வெளியேறவில்லை. தினமும் 200 பேரிடம் தொலைபேசியில் பேசுவதாகவும், கொரோனா குறித்து அவ்வப்போது நிலைமையை கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நாயுடு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரை போனில் தொடர்புக் கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 5 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார் என்று ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி கூறினார். எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனது பணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்த பின், பிரதமர் மோடி வீட்டிலிருந்ேத பணியாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா ஒவ்வொரு நாளும் பிரதமரை சந்திக்க வருகிறார். அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபாவும் வருகிறார். மேலும், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும் சந்திக்கிறது. சர்வதேச தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களிடமும் அவ்வப்போது பிரதமர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: