ஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

ஒட்டன்சத்திரம்: ஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கூட்டமாக மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தங்களது காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்டுப்பாடுகளுடன் மார்க்கட்டை நடத்த நிபந்தனை விதித்தார்.

பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத மார்க்கெட் நிர்வாகிகள் கேரளாவுக்கு நாங்கள் காய்கறி ஏற்றினால் தான் எங்கள் வியாபாரம் நீடிக்கும் என்று கூறி மறுத்து வந்தனர். இதையடுத்து சார்- ஆட்சியர்  தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒட்டன்சத்திரத்தில் மூன்று இடங்களில் காய்கறி மார்க்கெட் நடத்திக் கொள்ளலாம் என்று சில கட்டுப்பாடுடன் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(இன்று)  மார்க்கெட்டை மார்க்கெட் செயல்படத் துவங்கியது. ஆனால்  அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி மார்க்கெட்டில் இன்று காலை 2000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘ கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். ஆனால், அரசின் விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Related Stories: