கால் பண்ணா பிஸி; வாட்ஸ் ஆப்பில் பதில் இல்லை: அவசர பயணத்திற்கு அரசு அறிவித்த கட்டுப்பாட்டு அறை எண் குறித்து பொதுமக்கள் புகார்

சென்னை: சென்னையில் உள்ளவர்கள் வெளியூருக்கு செல்ல பாஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக மக்களை கொரோனா வைரஸ் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 979  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம்  தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்திலும் ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள்  வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து, 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்ல விரும்புபவர்கள் 75300 01100 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்ணை தமிழக அரசு அறிவித்தது. கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணம் செய்ய இருப்பவர்கள் தங்களுடைய பயணத்துக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், வெளியூர் செல்ல அனுமதி பெறுவதற்கு அறிவிக்கப்பட்டிருந்த எண் 7530001100 எப்போதும் பிஸியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பினாலும் பதில் இல்லை என குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ள மின் அஞ்சலும் செயல்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: