விவசாய பணிகளுக்கு அனுமதி: விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: உலக மக்களை கொரோனா வைரஸ் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 979  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம்  தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி  அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்திலும் ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள்  வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து, பொதுமக்களின் நன்மை கருதி, 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களில் இயக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 21 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 144 தடை அமலில் உள்ள நிலையில் மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் அத்தியவாசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவை இல்லாமல் மக்கள் சாலைகளிலோ, தெருக்களிலோ, கடைகளிலோ கூட்டமாக சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories: