தனியார் தொழிற்சாலைக்கு சீல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி ஒரு சில தொழிற்சாலைகள் இயங்குவதாக வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர். அப்போது கோணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் தொழிற்சாலைக்குள் அடைக்கப்பட்டு இரவு நேரங்களில் பணி அமர்த்தப்படுவததாக தெரியவந்தது.

இதையடுத்து வட்டாட்சியர் குமார், இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். பின்பு உள்ளே இருந்த வடமாநில இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Related Stories: