தடை உத்தரவை கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்குடன் சுற்றும் பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்

திருவள்ளூர்: மாநில அரசு பலமுறை அறிவுறுத்தியும், திருவள்ளூர் நகரில் பலரும் வீட்டில் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களால், கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உருவாகி உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தடை உத்தரவு அமலானாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. வைரஸ் தொற்று குறித்த அபாயத்தை உணராமல் பலர் ஊர் சுற்றுகின்றனர். மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதன் விற்பனை தடை செய்யப்படவில்லை.

ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி சாலையில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, காய்கறி வாங்க, போட்டி போட்டு கும்பலாக நிற்கின்றனர். அதிலும் பலர், அன்றைய தேவைக்கு மட்டும் காய்கறி வாங்கிச் செல்கின்றனர். மீண்டும் அடுத்தடுத்த நாட்களில், பொது இடங்களில் வலம் வருகின்றனர். இப்படி தினமும் ஒரு மணி நேரம் வரை ஊர் சுற்ற பொருட்கள் வாங்குவதாக காரணம் சொல்கின்றனர். ஆபத்து காலத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கலாம் என்றோ, அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்ற எண்ணமோ பலரிடம் இல்லை. திருவள்ளூர் நகரில் பல இடங்களில் போலீசார், பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை வைத்துள்ளனர்.

ஆனால், பலரும் மருந்து சீட்டு, மருத்துவமனை கார்டுகளை வைத்து, இருசக்கர வாகனங்கள், கார்களில் தாராளமாக செல்கின்றனர். போலீசார் தடுத்து நிறுத்தி கேட்டால், மருந்துக் கடை, மருத்துவமனை, வங்கிகள் மற்றும் மளிகை கடைகளுக்கு செல்வதாக பதில் அளிக்கின்றனர். இதனால், தெருவில் உலா வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறுகின்றனர். இதனால், சமூக தொற்று ஏற்பட்டு பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இத்தாலியில் ஒரே ஒரு பெண் மூலம் 30 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகினர் என்கிறது புள்ளி விபரம்.

Related Stories: