நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்: திரைத்துறை உள்ளிட்ட பலர் இரங்கல்

மதுரை: தூள் பட பிரபலமும் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர். நடிகர் விக்ரம், நடிகை ஜோதிகா நடத்த தூள் படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார். குறிப்பாக அப்படத்தில் வரும் சிங்கம் போல பாடல் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். அப்படத்திற்கு பின்னும் 25 படங்கள் வரை சிறு வேடங்களில் நடித்த பரவை முனியம்மா, வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்று வந்தார்.

83 வயதான நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: