புதிதாக 15,000 படுக்கை வசதிகள் செய்து தரும் வகையில் பள்ளி, அரசுத்துறைகளின் கட்டிடங்களை மருத்துவமனையாக மாற்ற அரசு உத்தரவு

* கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 15 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்து தரும் வகையில் மருத்துவமனையாக பொது கட்டிடங்களை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மார்ச் 30க்கு பிறகு கொரோனா மூன்றாவது கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு சில மருத்துவமனைகள் முழுவதுமாக கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

மற்ற மருத்துவமனைகளில் 150 முதல் 300 வரை படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வரை 13 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் புதிதாக 5 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக 15 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் பள்ளிகள், பழைய கட்டிடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை மருத்துவமனை போன்று மாற்ற தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக அந்தெந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைகளை போன்று மாற்றும் வகையில் பழைய மற்றும் பொது கட்டிடங்கள் காலியாக இருக்கிறதா என்பது தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: