×

பசியுடன் தவித்தவர்களுக்கு 35,000 உணவு பாக்கெட்டுகள்: திருப்பதியில் உலக நன்மைக்காக நடந்த யாகம் நிறைவு

திருமலை: திருப்பதியில் உலக நன்மைக்காக நடந்து வந்த யாகம் நிறைவு நிகழ்ச்சியில் நேற்று பசியுடன் தவித்தவர்களுக்கு 35 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலை அடுத்த தர்மகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா வேத பாடசாலையில் உலக நன்மைக்காக கடந்த 25ம் தேதி முதல் சீனிவாச சாந்தி மஹா தன்வந்திரி யாகம் நடந்து வந்தது. அதன்படி நேற்று பூரணாஹூதியுடன்  யாகம் நிறைவு பெற்றது. இதில் ஏழுமலையான் கோயில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் பங்கேற்றனர்.  பின்னர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் ஏழுமலையான் கோயிலில் முதலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அலிபிரி மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் தீவிரம் அதிகமாக இருப்பதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இருப்பினும் ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் ஆகம முறைப்படி வழக்கம்போல் அர்ச்சகர்கள் பூஜைகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனாவிலிருந்து அனைவரும் உடல் ஆரோக்கியம் பெற்று இதன் பாதிப்பில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக ஆகம ஆலோசகர்கள் கூறிய ஆலோசனையின்படி சீனிவாச சாந்தி உற்சவ தன்வந்திரி யாகம் கடந்த 25ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.

யாகத்தை பக்தர்களும் தேவஸ்தான தொலைக்காட்சி மூலமாகவும், மற்ற தொலைக்காட்சிகளின் மூலமாகவும் பார்த்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் பலர் உணவு கிடைக்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு உள்ளவர்களுக்காக நேற்று மதியத்திற்கு மட்டும் 15 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்,  இரவுக்கு 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வரை ஒவ்வொரு வேளையும்  வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.    பத்மாவதி மருத்துவக்கல்லூரி, ரூயா அரசு மருத்துவமனை, சுவிம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : world ,Tirupati , 5,000 food packets, Tirupati, Yagam completed
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...