திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது:
இன்று (நேற்று) கேரளாவில் சோக சம்பவம் நடந்துள்ளது. கொச்சியை சேர்ந்த ஒரு சகோதரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். இன்று கேரளாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது என்றார். பிரதமருக்கு கடிதம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரளா ஒரு நுகர்வோர் மாநிலம். கர்நாடக அரசு கேரள எல்லையில் பல இடங்களில் போக்குவரத்தை தடை செய்துள்ளது.
இதனால் கேரளாவுக்கான சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பத்திரிகை விநியோகிப்பவர்களை தடுக்கக்கூடாது. இதை மாவட்ட எஸ்பிக்கள் உறுதி செய்ய வேண்டும். என்று கூறியுள்ளார். இதற்கிடையே, கேரளாவில் நேற்று தொற்று நோய் தடுப்பு அவசர சட்டம் 2020 அமலுக்கு வந்துள்ளது.