மணப்பாறை: மணப்பாறை பகுதியில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த வாலிபர்களுக்கு உடற்பயிற்சி, நடனம் ஆட சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி போலீஸ் சரகத்தில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கே.புதுக்கோட்டை கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றிதிரிந்த இளைஞர்களை அழைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை எடுத்துக் கூறி, அவர்களுக்கு நூதன தண்டனையாக போலீசாருடன் உடற்பயிற்சி செய்ய வைத்தார்.
இதுபோல நடுப்பட்டி கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்த வாலிபர்களை அழைத்து நடனம் ஆட வைத்தார். மணப்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்களில் பொதுமக்கள் நடமாடுவது குறித்த விபரம் அறிய டிஎஸ்பி., குத்தாலிங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பறக்கும் ஹெலிபேடு காமிரா மூலம் கண்காணித்தார்.