×

ஃபிடல் காஸ்ட்ரோவின் பிரதிபலிப்பு: உலகைக் காக்கும் கியூபாவின் தலைசிறந்த மருத்துவர்கள் சேவை...இத்தாலி மக்கள் நெகிழ்ச்சி

கியூபா: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்குத் தன்னார்வமாகச் சென்று கியூபா மருத்துவர்கள் உதவி செய்து வருகின்றனர். கொரோனா வருங்காலத்தில் இந்தப் பெயரை யார் கூறினாலும் உலக மக்கள் அனைவரும் ஒரு சில விநாடிகள் அச்சம் கொள்வார்கள். கண்ணுக்கே தெரியாத மிகச் சிறிய உயிரினமான வைரஸ் அணுகுண்டை விட மிகவும் மோசமாகச் செயல்பட்டு இன்று உலகம் முழுவதிலும் சுமார் 27,000- க்கும் அதிகமான மக்களை பலி கொண்டுவிட்டது. கொரோனா வைரஸால் மொத்த மனிதகுலமும் நிலைகுலைந்து நிற்கிறது. கொரோனா வைரஸால் அதிகம் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக இத்தாலி உள்ளது. இந்த வைரஸ் கடுமையான சுவாசப் பிரச்னையை உருவாக்குகிறது.

எனவே இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் அதிகமாக உயிரிழக்கிறார்கள். உலகிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இத்தாலி உள்ளது. அங்கு கொரோனா உயிரிழப்புகள் 9,000 கடந்தத்துக்கு இதுவும் ஒரு பெரும் காரணம். இத்தாலியின் மோசமான நிலையைக் கண்டு அனைத்து நாடுகளும் அஞ்சி நடுங்கின. ஆனால் கியூபா அரசு மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த தன்னார்வ மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இத்தாலிக்குச் சென்று அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தனர். கியூபா மருத்துவர்கள் இத்தாலிக்குச் சென்றதும் அங்கு உயிரிழப்புகள் சற்று குறையத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

கியூபா மருத்துவர்களின் வருகை இத்தாலி மருத்துவர்கள் மற்றும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. ‘இதை வெற்றி எனக் கூற முடியாது இருந்தும் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவதைப் போல உள்ளது’ என உயிரிழப்புகள் குறைந்த பிறகு இத்தாலி மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறியிருந்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இத்தாலி கடுமையாகச் சிக்கித்தவித்த போது கியூபா 52 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அந்நாட்டுக்கு அனுப்பிவைத்தது.

கியூபா மருத்துவர்களின் சிறந்த பயிற்சியும் ஆபத்தான மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் பணியாற்றி அவர்கள் பழகிவிட்டார்கள் என்பது இத்தாலிய மக்களுக்குப் பெரும் ஆதரவாக இருந்தது. இத்தாலி இல்லாமல் மேலும் ஐந்து நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கியூபா மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த போது இத்தாலியும் அமெரிக்காவின் பக்கம் நின்றது. ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாத கியூபா இன்று இத்தாலியில் எதிர்பார்ப்பு இல்லாமல் சேவை செய்து வருகிறது.

ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் சுமார் 49 ஆண்டுகள் தொடர்ந்து தனி மனிதராக ஆட்சி செய்தார் பொதுவுடைமை புரட்சியாளரான ஃபிடல் காஸ்ட்ரோ. ‘தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்’ என்பது காஸ்ட்ரோவின் மிகப்பெரும் தாரக மந்திரம். அதன் படியே கியூபா முழுவதும் அனைவருக்கும் இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ வசதி ஆகிய நடைமுறைகளைக் கட்டாயப்படுத்தினார். இதன் விளைவாக ஒரே ஆண்டில் அந்நாட்டில் படிக்க மற்றும் எழுதத் தெரிந்தவர்களின் அளவு 98.2% - ஆக உயர்ந்தது. இது மட்டுமல்லாமல் தன் நாட்டு மருத்துவக் குழு உலகளாவிய சுகாதாரத்துக்கு உதவவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் காஸ்ட்ரோ.

Tags : Leaders ,Fidel Castro ,Cuban ,World ,Service ,Doctors , Fidel Castro, Cuba, Doctors Service, People of Italy
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...