×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு: நாகர்கோவில் கொரோனா பிரிவில் மேலும் 3 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 38-லிருந்து 40-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 38 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40ஆக உயர்ந்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்தவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து திரும்பிய காட்பாடியை சேர்ந்தவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பிரிவில் மேலும் 3 பேர் பலி:

இந்தியாவில் இதுவரை கொரேனா வைரஸ் தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் 3 பேர்  உயிரிழந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அவர்கள் உயிரிழந்தாக தெரிவிக்கப்படவில்லை. அவர்கள், ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மேலும், 3 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் உயிரிழந்துள்ளனர். காலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது, 2 வயது குழந்தை மற்றும் 30 வயது நபர் உயிரிழந்துள்ளனர்.  இவர்களும், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தாக தெரிவிக்கப்படவில்லை. இவர்கள், ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்தப்பின் தான் எப்படி உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும்.

Tags : Tamil Nadu ,Coronal , Coronal death toll rises to 40 in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...