கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள் நன்கொடை வழங்கலாம்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள் நன்கொடை வழங்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2020, மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு, புதிய கொரோனா வைரஸ் நோயை (கோவிட்-19) ஒரு உயிர்க்கொல்லி தொற்று நோய் என்று அறிவித்தது. மத்திய அரசும் கொரோனா வைரஸ் நோயை பேரிடராக அறிவித்துள்ளது. தமிழக அரசும், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திர்பார்க்கப்படக்கூடிய, பெரும் எண்ணிக்கையிலான நோய் தொற்று இனங்களை திறம்பட கையாள்வதற்கு, மருத்துவமனைகள், கண்காணிக்கும் மையங்கள், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி சாதனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்கு கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றது. மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும் கூட ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் தினக்கூலி இழப்பினை சந்திக்கிறார்கள். ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி தேவைப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், கோவிட்-19 தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளை கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய் தடுப்பிற்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பினை அளிக்க வேண்டும். அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50ன் கீழ் விலக்களிக்கப்படும்.நன்கொடைகளை, வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html இணையதளம் வழியாக செலுத்தலாம்.

Electronic Clearing System (ECS) மூலமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலகம் கிளை, சென்னை - 600009, சேமிப்பு கணக்கு எண் - 117201000000070, IFS Code: IOBA0001172, CMPRF PAN: AAAGC0038F மூலம் அனுப்பலாம்.மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் முகவரி: dspaycell.findpt@tn.gov.in முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: