வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 18,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும், ஒரேநாளில் 268 பேர் இறந்தனர். இங்கு மொத்தம் 1304 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 391 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரை 1,04,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி ஆகிய நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம், முதன் முதலில் கண்டறியப்பட்டு இந்த நோய்த்தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக திணறி வருகிறார் அதிபர் டிரம்ப். உலகின் பணக்கார, மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதால், 40 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.