காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 73 பைக், 15 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில், ஏப்ரல் 14ம் தேதி வரை, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் அன்னை இந்திராகாந்தி சாலை, காமராஜர் சாலை, காந்தி சாலை, மேட்டுத்தெரு, ரங்கசாமி குளம், சின்ன காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 3ம் நாளாக நேற்றுமூடப்பட்டன. அதே நேரத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை, அத்தியாவசிய தேவையான காய்கறிகள், மளிகை பொருள்கள் வாங்க காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், ராஜாஜி மார்க்கெட் ஆகியவற்றுக்கு அதிகாலை, 4 மணிமுதல், மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது.