தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மேலும் 3 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி....பாதிப்பு எண்ணிக்கை 38-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, 39 வயது நபர், சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஏற்கெனவே 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. சென்னை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது வாலிபருக்கும், சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூதாட்டிக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், 39 வயது நபருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 61 வயது முதியவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: