நாடு முழுவதும் ஒப்பந்தத்தில் டிரைவர்களுக்கு அளித்திருக்கும் கார்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: OLA நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு காரணமாக கார்களை இயக்க முடியாத நிலை நிலவுவதால், நாடு முழுவதும் ஒப்பந்தத்தில் டிரைவர்களுக்கு அளித்திருக்கும் கார்களை திரும்ப ஒப்படைக்க OLA  நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று வீடுகளில் 15 ஆயிரத்து 298 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 116 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் 743-ல், 608 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது. 120 மாதிரிகளின் முடிவுகள் வரவிருக்கின்றன. கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள், ஆன்லைன் நிறுவனங்கள் பாதிப்பு அடைந்துள்ளன.

இதில் ஒருபகுதியாக உள்ளது தான் இந்த OLA நிறுவனம். செயலி அடிப்படையில் கார்களை இயக்கும் OLA நிறுவனம், ஊரடங்கு காரணமாக தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் அளித்த கார்களை இயக்கி வரும் டிரைவர்களிடம் நாள் கணக்கில் பெறும் வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகவும் ஓலா அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 30 ஆயிரம் டிரைவர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் அளித்திருக்கும் கார்களை திரும்ப ஒப்படைக்க OLA உத்தரவிட்டுள்ளது. ஓலா நிறுவனம் உத்தரவிட்டபோதிலும், ஊரடங்கால் கார்களை இயக்க முடியாததால், டிரைவர்களால் திரும்ப அளிக்க முடியாத நிலை நிலவுகிறது.

Related Stories: