தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன்களை வசூலிக்கத் தடை.. ஊரடங்கை எதிர்கொள்ள பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை : காய்கறி, மளிகை, உணவு விடுதிகளுக்கு நேரக்  கட்டுப்பாடு என்ற தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட 144 தடை ஏப்.14 வரை தொடரும் என உத்தரவிட்டார்.பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அவை பின்வருமாறு...

*உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை.

*அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும்.

*மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி. ஆனால் சமைத்த உணவுகளை ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி இல்லை.

*டோர் டெலிவரி செய்வோர் அத்தியாவசிய தேவைக்கு என்ற வாசகத்தை ஓட்ட வேண்டும்.வாகனங்களில் ஒட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

*விவசாய தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்களின் நகர்வு அனுமதிக்கப்படுகிறது.

*கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

*அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படும்.

*கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

*வெளிநாடுகளில் இருந்து வந்த 54,000 பேரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.54,000 பேரின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தடையை மீறி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.அபராதம் விதிப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

*கர்ப்பிணிகளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்ஐவி தொற்று உள்ளோருக்கு 2 மாத மருந்துகளை வழங்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவசர தேவைக்கு 108ஐ தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: