குஜராத் மாநிலத்தில் ஒருவர் பலி: இந்தியளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு: பாதிப்பு 640-ஐ தாண்டியது

சென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் நேற்று வரை 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில முதன்மை செயலாளர் (திட்ட ஆணையம்) ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கடந்த மார்ச் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த பெண் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சைப்பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து கடந்த 3-ம் தேதி இந்தியா திரும்பிய ஜெகன்(40) என்பவர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜெகன் பற்றிய ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. பரிசோதனை முடிவு வந்த பிறகே ஜெகன் உயிரிழந்துள்ளது கொரோனா பாதிப்பாலா? இல்லை வேறு எதும் நோயினாலா? என்பது தெரியவரும்.

Related Stories: