சென்னையில் அவசர பணிகளுக்காக 200 பஸ்கள் இயக்கம்

சென்னை: அத்தியாவசிய பணியாளர்கள் சென்று வரும் வகையில் சென்னையில் 200 மாநகர பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது வரும் 1ம் தேதி காலை 6 மணி வரை வரை அமலில் இருக்கும். ஆனாலும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக 200 மாநகர பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வரும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குமாநகர் போக்குவரத்து் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவசரப் பணிகளுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர் என கூறியுள்ளார்.

Related Stories: