வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைக்கிறது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,200-ஐ தாண்டியது. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,22,566-ஐ தாண்டிவிட்டது. 35 நாடுகள் முற்றிலும் முடங்கின. மக்கள் வீட்டை விட்ட வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
கொரோனா மையம் கொண்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503ஐ தாண்டிவிட்டது. பாதிப்பு 74,386ஐ தாண்டியுள்ளது. இது உலகின் மொத்த பலியில் மூன்றில் ஒரு பங்கு. 6 கோடி பேர் வசிக்கும் இத்தாலியில் நிலைமை மிக மோசமாக உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இத்தாலி பிரதமர் கிசப்பே காண்டே, அத்தியாவசியம் அல்லாத அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டார். சீனாவில் பலி எண்ணிக்கை 3,287 ஆக உள்ளது. 81,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் அதிக பாதிப்பு உள்ளது. இங்கு இதுவரை பலி எண்ணிக்கை 2,077-ஐ தாண்டிவிட்டது. பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,515 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்க, ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் தேவை என இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர். புதிதாக 13,347-ஐ பாதிக்கப்பட்டனர். இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முடங்கியுள்ளன. மற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.