சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறைந்த அளவு மட்டுமே திறந்துள்ளன. உணவகங்களும் குறைந்த அளவில் மட்டுமே திறந்துள்ளது. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிதாவது : ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகளை டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. டோர் டெலிவரி செய்பவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களான மாஸ்க், கையுறை, தொப்பி அனிந்து டெலிவரி செய்ய வேண்டும். சமைத்த உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.